Saturday, February 26, 2011

சக்கரங்கள் சுழலுகின்றன ...

*

பதிவுலகிறகு வந்த பின் செய்த சில பிடித்த விஷயங்களில் ஒன்று
மத்திய அரசு நடத்தும் ஒரு குறை தீர்க்கும் இணையப் பக்கத்தைக் கண்டுபிடித்து அதற்கு எழுதிய சில கடிதங்கள். அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள இப்பதிவுகளைப் பாருங்கள்:

245. உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்


246. மீண்டும் ஒரு வேண்டுகோள்


248. வாருங்களேன் .. தொடருவோமே இந்த ‘விளையாட்டை’

//Reply for your e-mail dated 17.09.2007 about Samayanallur-Paravai-Madurai//  மூன்றே கால் ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் உள்ள குறைபாடு பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கடிதம் உடனே மதுரை காவல் துறைக்கு அனுப்பப்பட்டதாக ஒரு கடிதம் பெற்றேன்.

கால ஓட்டத்தில் நாங்கள் மிகவும் எதிர்பார்த்த இரு விஷயங்களில் ஒன்றான சாலை அகலப்படுத்தும் பணி சமீபத்தில் நானகைந்து  மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

இன்னொன்று, இப்பக்கத்தில் மதுரை - திண்டுக்கல் இடையே செல்லும் பேருந்துகளின் ’புத்திகெட்ட’ ஓட்டுனர்களின் மனதில் கொஞ்சம் புத்தி. இதை சட்டத்தால் ஏதும் மாற்ற முடியாது.  சாலையில் செல்வோரைப் பற்றிய சிந்தனை ஏதும் இல்லாமல் மகா முரட்டுத்தனமாக சாலையின் வலது ஓரம் வரை தங்கள் வாகனங்களை ஓட்டி எல்லோரையும் நடுங்க வைக்கும் அரக்கத்தனம் இந்த காட்டுத்தனமான ஓட்டுனர்களின் புத்தியில் உரைக்க வேண்டும். அதுவும் ’நல்லமணி’ என்ற பெயரில் ஓடும் பேருந்துகளின் ஓட்டுனர்கள் எப்படி பிறந்தனரோ, வளர்ந்தனரோ ... எந்த சாலை விதிகளையும் கண்டுகொள்ளாமல்  அவர்கள் சாலைகளில் சீறிச் செல்வது எவரையும் மிரள வைக்கும். அதற்காக மற்ற பேருந்து ஓட்டுனர்கள் எல்லோரும் புண்ணியவான்களல்ல. அரசுப் பேருந்து ஓட்டுனர்களில் பலரும் அரக்கர்களே. ஆனால் இவர்களைச் சட்டம் ஏதும் மாற்றாது. அவர்களின் மர மண்டைகளில் தானே சில ஒழுங்குகள் ஏறவேண்டும். அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.

எப்படியோ ... 2007-ல் மத்திய அரசின் குறைதீர்க்கும் இணையப் பக்கத்தில் எழுதிய மடலுக்கு சமயநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து நேற்று ஒரு காவலர் என்னைக் காண தொடர்பு கொண்டார். நான் சொன்ன நேரத்தில் மிகச் சரியாக வந்து என் மடல் தொடர்பான கோப்பைக் காண்பித்தார். மத்திய அரசு --> முதலமைச்சர் அலுவலகம் --> மதுரை காவல்துறை --> சமயநல்லூர் காவலகம் என்று வந்து சேர்ந்துள்ளது.

கேட்ட முக்கிய கோரிக்கை சாலை அகலப்படுத்துவது. அதுவும் நடந்தேறி விட்டது ( என் மடலால்! ) என்று நினைத்துக் கொண்டு என் கோரிக்கை நிறைவேறிவிட்டதைக் கூறி ஒரு கடிதம் கொடுத்தேன் ... சுபம்!!!


ஆக, கல்லெறிந்தால் காய் விழுகலாம் என்ற நினைப்பை உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்தி ...  வாருங்களேன் .. தொடருவோமே இந்த ‘விளையாட்டை’ என்று அழைக்கிறேன்.

இதுபோன்ற குறைகளை அவ்விணையப் பக்கத்தில் எழுதி அதன் பின் நம் தொகுப்பாக இருக்கட்டும் என்ற முனைப்பில் பதிவர் சர்வேசன் தமிழ்மணைத்தில் இணைத்த இணையப் பக்கம் -

உங்களுக்கு இந்த இணையப் பக்கத்தை அறிமுகம் செய்விக்கவும், ஆரம்பித்த ஒரு நல்ல காரியம் தொடர உங்கள் ஒத்துழைப்பை கோரவுமே இப்பதிவு; நன்றி.

0 comments: